வேலைக்கு அரசை எதிர்பார்க்காமல் சுயதொழில் துவங்கி முன்னேறலாம் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

மன்னார்குடி, மார்ச்8: மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி நுண் உயிரியல் துறை சார்பில் “சுய தொழில் வளர்ச்சியில் - நுண்ணுயிர் தொழிற்நுட்பம்” என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. நுண் உயிரியல் துறை தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கருத்தரங்கை பேராசிரியர் ராதிகா மணிமாறன் தொகுத்து வழங்கினார். கருத்தரங்கில் கன்னியாகுமரி பயோ சயின்ஸ் நிர்வாக இயக்குனர்ஆதி விசுவநாதன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் இளங்கோ, பாலபாஸ்கர், சென்னை ராமகிருஷ்ணா மிஷன் உதவி பேராசிரியர் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்று “சுய தொழில் வளர்ச்சியில் நுண்ணுயிர் தொழிற்நுட்பம்” குறித்து பேசினர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்து கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில், படித்த அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு என்பது தற்போது கடினமாக உள்ள நிலையில் ஒரு தனி மனிதனின் முன்னேற்றத்திற்கு அரசு வேலையை மட்டும் எதிர் பார்த்து காத்திராமல் சுய தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் வளர்ச்சி பாதை யில் பிரகாசிக்கலாம். எனவே வேலை வாய்ப்புக்காக அரசை மட்டுமே சார்ந்து இருக்காமல் ஒவ்வொருவரும் சுயதொழில் துவங்கி அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறலாம். அதற்கான வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து கிடக்கிறது என்றார். கருத்தரங்கில் ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் நுண் உயிரியல் துறையில் கல்வி பயிலும் மாணவிகள் உள்பட திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Related Stories: