குளித்தலை, மார்ச் 8: அடிப்படை வசதி கோரி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்த மருதூர் பேரூராட்சி விஸ்வநாதபுரம் என அழைக்கப்படும் சுப்பன் ஆசாரிகளம் பகுதி மக்களுடன் அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சுமூக முடிவு ஏற்பட்டு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக கூறி கையொப்பமிட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம் என்று அழைக்கப்படும் சுப்பன் ஆசாரிகளம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 25 குடும்பத்தினர் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்..இந்த பகுதிக்கு இன்றுவரை உரிய சாலை வசதி, தெருவிளக்கு வசதி செய்துதரப்படவில்லை எனவும் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கபோவதாக மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ஆணையர், முதல் அமைச்சர், கலெக்டர் உள்ளிட்டோருக்கு அப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.