திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து திமுக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜய் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், அவரது வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த தேர்தல் வழக்கு மனுவில், 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை வைத்து விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வேட்புமனுவில் வருமான வரி பாக்கி இல்லை எனக் கூறியுள்ளார். வருமான வரி வழக்கு நிலுவையில் உள்ளதை மறைத்துள்ளார்.

அதிகளவில் செலவு செய்து வெளிநாட்டினர் மூலம் பிரசாரம் செய்துள்ளார். கட்சி அடையாளங்களை அணிந்து சென்று முட்டி போட்டு தேவாலயத்தில் பிரசாரம் செய்திருக்கிறார். தேர்தல் செலவு கணக்கு விவரங்களை இதுவரை தாக்கல் செய்யவில்லை. ரூட் சமூக வலைதளம் மூலம் பிரசாரத்திற்கு எவ்வளவு செலவு செய்தார் என்ற விவரங்களை இதுவரை தெரிவிக்கவில்லை. இதேபோல பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளதால் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: