பர்மிங்காம்: 10வது ஐசிசி மகளிர் டி.20உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று பர்மிங்காமில் நடந்த 6வது லீக் போட்டியில் குரூப் 1ல் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 68, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36, ரிச்சா கோஷ் 17 பந்தில் 34 ரன் அடித்தார். பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் 17 ஓவரில் 106 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 64 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய பவுலிங்கில் தீப்தி சர்மா 4 ஓவரில் 10 ரன் கொடுத்து 5 விக்கெட்டும், சரணி 3 விக்கெட் எடுத்தனர். தீப்தி சர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.
வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: இன்று திரண்டு வந்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மந்தனா, தீப்தி எங்களுக்கு எப்போதெல்லாம் தேவையோ, அப்போதெல்லாம் அணியை ஊக்கப்படுத்தத் தயாராக இருக்கிறார்கள். இது ஒரு நல்ல ஆடுகளம். ஆரம்பத்தில் தேவையில்லாமல் நாங்களே அழுத்தம் கொடுத்துக் கொண்டோம். ஆனால் ஸ்மிருதியும் நானும் பேட்டிங் செய்தபோது, ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றோம். ரிச்சா கோஷ் களம் இறங்குவது என் கையில் இருந்தால், முதல் பந்திலேயே அவரை அனுப்பி வைக்க விரும்புவேன்.
ஆனால் அவருக்கு ஒரு பங்கு இருக்கிறது, அதை அவர் சிறப்பாகச் செய்து வருகிறார். அணி ஒட்டுமொத்த ஃபீல்டிங்கில் மிகவும் மகிழ்ச்சி, என்றார். தீப்தி சர்மா கூறுகையில், எனக்கு ஐசிசி தொடர் மிகவும் பிடிக்கும்.ஆடுகளம் சுழலுக்குச் சாதகமாக இருந்ததால், மெதுவாகப் பந்துவீச வேண்டும் என நினைத்தேன், அது எனக்கு உதவியது, என்றார். இந்தியா அடுத்ததாக வரும் 17ம் தேதி நெதர்லாந்து அணியுடன் ஆட உள்ளது.
