சத்தியமங்கலம், மார்ச் 8: சத்தியமங்கலம் அருகே புதுக்கொத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரிடம் கோபி அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் அப்புசாமி என்பவர் பத்திரத்தை அடமானம் வைத்து கடனாக ரூ.1 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்புசாமி ரூ.50 ஆயிரம் பணத்தை பெரியசாமிக்கு திருப்பிக் கொடுத்துவிட்டு அடமானம் வைத்திருந்த பத்திரத்தை திருப்பி கேட்டதாக தெரிகிறது. அப்போது, பெரியசாமி ரூ.1 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு பத்திரத்தை திருப்பி கேட்டதால் திருப்பி தர முடியாது என மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், பெரியசாமியை அப்புசாமி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பெரியசாமி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் அப்புசாமியை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.