திருவாரூர், ஜூன் 8: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அம்மன் கோயில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த நகையினை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா செல்வபுரம் அருகே நாகக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. ஊர் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலில் அதே ஊரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன்(51) என்பவர் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கோயிலை பூட்டி விட்டு முத்துகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை வழக்கம் போல அதே ஊரை சேர்ந்த சரண்யா என்பவர் கோலம் போடுவதற்காக வந்தபோது கோயிலின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து அர்ச்சகர் முத்துகிருஷ்ணனுக்கு, சரண்யா தகவல் தெரிவித்த நிலையில் உடனடியாக முத்துகிருஷ்ணன் கோயிலுக்கு வந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த ஒன்றரை கிராம் எடையிலான 2 தங்க தாலிகள் மற்றும் அரை கிராம் எடையிலான 2 தங்க பொட்டு காசுகள் என மொத்தம் 4 கிராம் எடையிலான நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.இது தொடர்பாக முத்துகிருஷ்ணன் நன்னிலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மர்ம நபர்கள் அம்மன் தாலியை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
