தஞ்சாவூர், ஜுன் 9: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இ.கம்யூ) சார்பில் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வேளாண்மைத் தொழிலில் ஈடுபடும் டிராக்டர்கள் பயன்பாடு என்பது வயல்வெளிகள், சேற்று பகுதிகள், கிராமப்புறச் சாலைகள் ஆகியவையாகும். இந்த நிலையில் துரித சாலை வரி போடுவது என்பது ஏற்கக் கூடியதாக இல்லை. டிராக்டர்கள் வாங்கும் போது சாலை வரி, ஜிஎஸ்டி வரி, வாட் வரி என பல வரிகள் வசூலிப்பது அநியாயமாகும். இதை உடனடியாக நிறுத்த வேண்டும். துரித சாலையில் டிராக்டர்கள் பயணிக்க கூடாது என்ற நிபந்தனை இருக்கும்போது சாலை வரி போடுவது என்பது ஏற்புடையதாக இல்லை.
மேலும் வேளாண் தொழில்களுக்கு டிராக்டருக்கு வாட் வரி வசூலிப்பது பெரும் சுமையாகிறது. உழவுப்பணி, விதை, மருந்து தெளிப்பு, களையெடுப்பு, வரப்பு அமைப்பு, வேளாண் பொருட்களுக்கு சுமை போக்குவரத்து உள்ளிட்ட பணிகளுக்கு டிராக்டர்கள் அத்தியாவசியமாகிறது. மேலும் நாடு முழுவதும் விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்கள் டீசல் மூலம் 56,000 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வருமானமாக வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு இயற்கை இன்னல்களுக்கு இடையே வேளாண்மை உற்பத்தியில் ஈடுபடும் 36 கோடி விவசாயிகளுக்கு வரிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
வேளாண் உற்பத்தியில் ஈடுபடும் விவசாய கருவிகள் பட்டியலில் டிராக்டர் பெயர் இணைக்கப்பட வேண்டும். டிராக்டர் டீசலுக்கு வாட் வரி நீக்க வேண்டும். சாலை வரி, என்சிசிடி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் நீக்க வேண்டும். வேளாண்மை உற்பத்தியில் முழுமையாக ஈடுபடும் டிராக்டருக்கு போடப்படும் அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும். விவசாய கருவிகள் பட்டியலில் டிராக்டர் பெயர் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஒன்றிய பிரதமர்,அந்தந்த மாநில அரசுகளுக்கு மாவட்ட கலெக்டர் மூலம் நாடு தழுவிய கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட கலெக்டர் மூலமாக கோரிக்கை மனுவினை ஒன்றிய- தமிழ்நாடு அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சேவையா, திருநாவுக்கரசு, பூதலூர் ஒன்றிய செயலாளர் முகில், தஞ்சை ஒன்றிய செயலாளர் குணசேகரன், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சௌந்தர்ராஜன், துணைச் செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
