திருச்சி: போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்தி உல்லாசமாக இருந்தபோது, திடீரென மயக்கம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக காதலனை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. பிளஸ் 2 முடித்து விட்டு கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. அதே பகுதியை சேர்ந்தவர் வினோத் (18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் காதலர்கள். சிறுமியை வினோத் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, இருவரும் தனிமையில் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு திருச்சியின் பல்வேறு இடங்களுக்கு இருவரும் சென்று வந்துள்ளனர். பின்னர், திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் இருவரும் தங்கியுள்ளனர். தொடர்ந்து, இருவரும் போதை மாத்திரை மற்றும் போதை ஊசியை பயன்படுத்தி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று மதியம் சிறுமி பிரியாணி சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து, அவருக்கு சில மணி நேரத்தில் வலிப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் வினோத், சிறுமியை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர். தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தார். இது குறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து, காதலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,‘‘ 18 வயது சிறுமியிடம் செக்ஸ் வார்த்தை கூறி, அவரது காதலன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளான். முக்கியமாக, சிறுமிக்கு அடிக்கடி போதை ஊசி மற்றும் போதை மருந்துகள் கொடுத்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இருவரும் போதை மருந்தை பயன்படுத்தி பல மணி நேரம் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, போதை மயக்கத்தில் இருந்த சிறுமி கட்டிலில் இருந்து விழுந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்துள்ளார். தொடர்ந்து, காதலன், நண்பர் இருவரும் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பின்னர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். சிறுமிக்கு 18 வயது நிரம்பியுள்ளதா? என்பது குறித்தும், காதலனுக்கும் 18வயது முடிந்து விட்டதா?, என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது என்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதை மாத்திரை, ஊசி பறிமுதல்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் சிறுமி தங்கியிருந்த அறையில் கன்டோன்மென்ட் போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது, அந்த அறையில் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
