ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டது வியாபாரியிடம் ரூ.1.20 லட்சம் பறிமுதல்

அம்பத்தூர், மார்ச் 6: முறையான ஆவணமின்றி வியாபாரி கொண்டு சென்ற ரூ.1.20 லட்சத்தை அம்பத்தூர் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி கடந்த மாதம் 26ம் தேதி முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கொண்டு செல்லும் நபர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை அம்பத்தூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கேசவன் தலைமையில், அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் கிழக்கு அவென்யூ, அம்மா உணவகம் அருகில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு அருள் நகரை சார்ந்த ரங்கநாதன்(36) என்ற உப்பு விநியோகஸ்தரிடம் ரூ.1.20 லட்சம் இருந்தது தெரியவந்தது. அவரிடம், அந்த பணத்திற்கு எவ்வித ஆவணங்களும் இல்லை. இதனால், பறக்கும் படை அதிகாரிகள் ரங்கநாதனிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து, அம்பத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரி விஜயகுமாரி மூலமாக அம்பத்தூர் தாசில்தார் பார்வதியிடம் ஒப்படைத்தனர்.பிறகு, அவர் அந்த பணத்தை அம்பத்தூர் கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Related Stories: