பல்லடத்தில் தெரு நாய் தொல்லையை கண்டித்து சாலை மறியல்

பல்லடம், ஜூன் 2: பல்லடத்தில் தெரு நாய் தொல்லையை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது. பல்லடம் நகராட்சி கொசவம்பாளையம் மற்றும் செட்டிபாளையம் சாலையில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சில சமயங்களில் சாலையில் நடந்து செல்பவர்களை நாய்கள் கடித்து விடுகிறது. இந்த நிலையில் நேற்று தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்லடம்-செட்டிபாளையம் சாலையில் அரசு போக்குவரத்து பணி மனை அருகில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்து சென்ற நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், சத்தியசுந்தரராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தெரு நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்படி மாலையில் அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய்களை பிடித்து சென்றனர்.

Related Stories: