பணம் பறிமுதலால் பொருட்கள் வாங்க செல்லும் வியாபாரிகளுக்கு பாதிப்பு

தொண்டி, மார்ச் 5: தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.6ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்.26ல் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பல்வேறு நடத்தை விதிகள் இருந்தாலும் வாகன பரிசோதனையில் தேர்தல் கமிஷன் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க மாவட்டத்தில் உள்ள செக்போஸ்ட்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டூவீலர், கார், வேன், லாரி உள்ளிட்ட தனியார் வாகனங்கள் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மளிகை, அரிசி, காய்கறிகள், இரும்பு பொருட்கள், ஸ்டேசனரி, பூ, பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் நடத்துபவர்கள் மதுரை உள்பட வெளி மாவட்டங்களிலேயே பொருட்கள் கொள்முதல் செய்கின்றனர். இவ்வாறு கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான பணத்தை வியாபாரிகளில் பெரும்பாலானோர் நேரடியாக கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் ரூ.50ஆயிரம் வரை மட்டுமே பணம் கொண்டு செல்லலாம். அதற்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வியாபாரிகள் பணம் கொண்டு செல்லும்போது அதற்கான ஆவணங்களை வைத்திருக்க முடியாது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

Related Stories: