சென்னை: நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய் தனது இரங்கல் செய்தியில், ‘‘அருமை நண்பர் அஜித் குமார் தாயார் மோகினி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: அன்பு சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதை பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரை தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்த துயரில் அவர் மீள துணைநிற்க விழைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): பெற்றெடுத்த தாயாரை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப் பெரிய இழப்பாகும். அந்த வகையில், தாயாரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரர் நடிகர் அஜித்குமார் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்கள் என கூறியுள்ளார்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டி
யன், மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்களும் அஜித் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
