மக்காச்சோளத்தை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

தேவதானப்பட்டி, மார்ச் 3: தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வறட்சி மற்றும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மக்காச்சோள சாகுபடி பரப்பளவு பெருமளவு குறைந்தது. எனவே  மக்காச் சோளத்தின் விலை கிலோ ரூ.25 வரை விற்பனையானது. மனிதர்கள் மட்டுமின்றி கால்நடை தீவனத்திற்கு மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது.  நடப்பாண்டில் போதிய அளவு பருவமழை பெய்ததால் சாகுபடி பரப்பு அதிகரித்தது. கடந்த ஒரு மாதமாக மக்காச் சோளம் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்துள்ளதால் விலை குறைந்துள்ளது.    ஒரு ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடிக்கு உழவு, பார்போடுதல், விதை, நடவு, களையெடுப்பு, உரமிடுதல், மருந்து தெளிப்பு என ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவாகிறது.

இதில் குத்தகை நிலம், வாடகை தண்ணீர் என இருந்தால் இன்னும் செலவினம் கூடுகிறது. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் ஒரு கிலோ ரூ.14 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. இதனால் சாகுபடிக்கு செலவு செய்த தொகை கூட கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆகையால் அரசு நெல் கொள்முதல் செய்வது போல் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்பட்ட மக்காச் சோளத்திற்கும் உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: