சாத்தான்குளம் அருகே இரவில் பயங்கரம் தொழிலாளி வெட்டிக் கொலை வாலிபருக்கு வலை

சாத்தான்குளம், மார்ச் 3: சாத்தான்குளம் அருகே நேற்றிரவு தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரியைச் சேர்ந்த பெருமாள் மகன் கணேசன் (46). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும்  ஒரு மகள்  உள்ளனர். நாசரேத் அடுத்த வைத்திலிங்கபுரத்தைச் சேர்ந்த இலங்காமணி மகன் ராமன் என்பவர் அம்பலச்சேரி அருகே புதிதாக உருவாக்கப்பட்ட சமத்துவப்புரத்தில் வீடு கட்டி வசித்து வந்தார்.  இதனிடையே சமத்துவபுரம் பகுதியில் குடிநீர் விநியோகம் நேற்று தடைபட்டது. இதுகுறித்து பஞ்சாயத்து தரப்பில் கேட்டபோது இன்று (3ம் தேதி) உறுதியாக தண்ணீர் வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இதை ஏற்றுக்கொள்ளாத ராமன், நேற்று இரவு 7 மணி அளவில் அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணேசன், இதை தட்டிக்கேட்டபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.

ராமன் ஆவேசத்துடன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணேசனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேசன் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்து வந்த சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமார், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து தலைமறைவான ராமனை  தேடி வருகின்றனர்.

Related Stories: