சென்னை: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடத்திய ஆய்வில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சமீபத்திய ஒதுக்கீடுகள் மற்றும் ஒப்புதல்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமல், அவசர கதியில் விதிகளை மீறி ஒப்புதல் வழங்கப்பட்டது தெரியவந்தது. தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் ஒப்புதல்களில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், 2 உயர் அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சமீபத்திய ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் வழங்கியதில் வெளிப்படை தன்மை இல்லாமல், அவசர கதியில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடப்பதற்கும், நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முறையற்ற நிர்வாக தலையீடு மற்றும் இதர குற்றச்சாட்டுகள் காரணமாக வி. காசி, தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர், (வருவாய்) மற்றும் பி.சந்திரசேகரன், தலைமை பொறியாளர் (மரபுசாரா எரிசக்தி) ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மேற்கூறிய குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஓய்வு பெற்ற இயக்குநர் (தொழில்நுட்பம்) பசுமை எரிசக்தி கழகம் எஸ். மங்களநாதனின் ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான முறையான விசாரனை நடைபெற்று மின்வாரிய விதிமுறைகளின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
