நெல்லை,மே 20: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதி பலியானார். பணகுடி கோரிகாலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(49). பெயிண்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன் தினம் இரவு பணகுடியை அடுத்த தண்டையர் குளம் விலக்கு பகுதியில் நான்குவழிச்சாலையின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு சுப்பிரமணியன் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக நாகர்கோவில் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையை கடந்த சுப்பிரமணியன் மீது மோதியது.
இதில் சில அடி தூரம் அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
