மதுரை, மே 20: முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சீசன் தற்போது தொடங்கி உள்ள நிலையில் மதுரையில் பலாப்பழத்தின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன்படி யானைக்கல் மற்றும் சிம்மக்கல் பகுதியில் உள்ள பழக்கடைகளில் இருந்து மதுரை மட்டுமின்றி, வௌி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பலாப்பழத்தை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, ‘திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மற்றும் புதுக்கோட்டை, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் இவை அதிகம் வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை பகுதி பலாம்பழம் தனிப்பட்ட சுவையுடன் இருக்கும். இதனை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். இதற்காக புதுக்கோட்டையில் இருந்து தினந்தோறும் வாகனங்களில் அதிகளவில் பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். பழத்திற்கு தகுந்தாற்போல் விலை இருக்கும். முழு பழம் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை ஆகிறது. சில்லரையாக 15 சுளைகள் ரூ.50க்கு விற்பனை செய்கிறோம்’ என்றனர். இதற்கிடையே தற்போது பலாப்பழம் சீசன் என்பதால் பொதுமக்கள் அதனை விரும்பி வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
