கோவை,மே26:கோவையில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை துவங்கி வருகிற 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் பாலாஜி, துணை செயலாளர் தீபாலா ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்துடன், கோவை மாநகராட்சி இணைந்து, சர்வதேச தரத்திலான செமி உள் விளையாட்டு அரங்கத்தை அமைத்துள்ளது. இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு நாட்டின் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
ஆண்கள் பிரிவில் டெல்லி,கேரளா,சென்னை, கோவை உள்ளிட்ட அணிகளும், பெண்கள் பிரிவில் செகந்திராபாத், சென்னை,கோவை, கேரளா உள்ளிட்ட அணிகளும் பங்கேற்கின்றன. போட்டிகள் நாளை(27ம் தேதி) மாலை துவங்குகின்றன. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வஉசி பூங்கா உள்விளையாட்டு கூடைப்பந்து மைதானத்தில் போட்டிகள் நடைபெறும். பார்வையாளர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம். தொடக்க விழா நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. மே 31ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அன்றைய நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
