டாஸ்மாக் அமைக்க இடத்தை ஆக்கிரமிப்பதாக புகார்; கருணை கொலை செய்யக் கோரி தம்பதி தரையில் உருண்டு தர்ணா: ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் பரபரப்பு

 

ஒட்டன்சத்திரம்: இடத்தை ஆக்கிரமித்து டாஸ்மாக் கடை அமைக்க முயற்சிப்பதால் தங்களை கருணை கொலை செய்யக் கோரி, ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் தம்பதி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், நகராட்சி 6வது வார்டு பழனிகவுண்டன்புதூரை சேர்ந்தவர் கருப்புச்சாமி. மனைவி வளர்மதி. வயதான இந்த தம்பதிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்ட விடாமல் தடுப்பதாகவும், அந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து தம்பதி நீதிமன்றத்தில் முறையிட்டு உத்தரவு பெற்றும், இதற்கான அனைத்து ஆவணங்களும் வைத்திருக்கும் நிலையிலும் மர்ம நபர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில், கருப்புச்சாமி- வளர்மதி தம்பதி நேற்று காலை ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் வந்து தங்களை கருணை கொலை செய்துவிட அனுமதி தருமாறு கூறி, திடீரென தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தம்பதி கூறுகையில், ‘‘எங்களது நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்வது தொடர்பாக புகார் அளித்தும், எதிர்தரப்புக்கு சாதகமாக போலீசார் செயல்படுகின்றனர். இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு, டிஜிபி, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் எங்களை கருணை கொலை செய்து விட அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டோம்’’ என்றனர்.

Related Stories: