வையம்பட்டி அருகே பெரியஅணைக்கரைப்பட்டியில் 8 ஆண்டாக காட்சி பொருளாக இருக்கும் நீர்த்தேக்க தொட்டி

திருச்சி, மார்ச் 2: வையம்பட்டி அருகே பெரியஅணைக்கரைப்பட்டியில் 8 ஆண்டுகளாக காட்சி பொருளாக இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் முகவனூர் தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட பெரியஅணைக்கரைப்பட்–்டி கிராமம் உள்ளது. சுமார் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.  இந்நிலையில் அந்த பகுதியில் ஆதிதிராவிடர் காலனி கலைஞர்நகர் இருக்கிறது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 2013ல் ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் அந்த பகுதியிலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்டதாகும். ஆனால், 8 ஆண்டுகள் கடந்த நிலையில் புதிய தொட்டியாக திறப்பு விழா காணாமல் காட்சி பொருளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்து வருகிறது. இதனால் காலனி பகுதிக்கு மட்டும் தண்ணீர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறுகின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் ஓமாந்திரன் கூறுகையில், பெரியஅணைக்கரைப்பட்டியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் போடப்பட்ட குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்றால் ஆதிதிராவிடர் காலனி பகுதி மக்கள் 5 அடி பள்ளத்திற்கு குழி தோண்டி குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். அப்படி பிடித்தாலும் ஒரு நாளைக்கு 8 குடம் பிடிப்பதற்குள்ளே தண்ணீர் நின்று விடுகிறது.  குடிநீரை பள்ளம் தோண்டி பிடிப்பதால் சில நேரங்களில் குழந்தைகள் அதில் விழுந்துவிடும் நிகழ்வும் நடந்துள்ளது. மேலும் ஊராட்சியில் எங்கள் பகுதி கடைசியாக உள்ளது. அதனால் தண்ணீர் மேலே வராது. அதற்காகத்தான் குழி தோண்டி தண்ணீர் பிடிக்கிறோம்.

இதற்கு தீர்வு என்பது புதிதாக அமைக்கப்பட்டு காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை ஏற்றினால் தட்டுப்பாடு இன்றி ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதுபற்றி கடந்த 8 ஆண்டுகளாக எம்பி, கலெக்டர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் என தொடர்ந்து முறையிட்டு வருகிறோம். அதிகாரிகளை சந்திக்கும்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லிவிட்டு அனுப்பிவிடுகின்றனர். ஆனால், எங்களின் கோரிக்கை என்பது கிணற்றில் போட்ட கல்லாகத்தான் இத்தனை ஆண்டுகள் இருக்கிறது. ஆதிதிராவிடர்களாக இருப்பதால் என்னவோ எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுறதோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இனியாவது குடிநீர் பிரச்னையை தீர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை ஏற்றிட வழிவகை செய்திட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: