திருமலை: ஆந்திராவில் பிறக்கும் 3வது குழந்தைக்கு ரூ.30 ஆயிரம், 4வது குழந்தைக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபுநாயுடு அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள நரசன்னப்பேட்டையில் தூய்மை ஆந்திரா ஸ்வச் ஆந்திரா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது: மாநிலத்தில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதே எனது முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளேன்.
பொருளாதாரத்தை உயர்த்தி ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவேண்டும். ஒரு காலத்தில் குடும்ப கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும் என நானே செயல் திட்டம் வகுத்தேன். ஆனால் பல நாடுகள் முதியவர்கள் கொண்ட நாடுகளாக மாறி வருகிறது. இயந்திரத்தை நம்பி உள்ளார்கள். எனவே குழந்தைகள் என்பது நமக்கு ஒரு வரம். இதற்காக புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளேன்.
எனவே ஆந்திர மாநிலத்தில் இனி 3வது குழந்தை பிறந்த உடனேயே ரூ.30 ஆயிரம் வழங்கப்படும், 4வது குழந்தை பிறந்தால் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். குழந்தைகளை யாரும் சுமையாக கருதக்கூடாது. அவர்களை செல்வமாக அங்கீகரிக்க வேண்டும். தாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக வரும் ஜுன் 1ம் தேதி பிள்ளைகளின் கல்வி உதவி தொகை ரூ.15 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
