சென்னை: ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களின் விலையை, குறிப்பாக லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.3 மற்றும் டீசல் ரூ.3 என்ற அளவில் உயர்த்தியுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறையும்போது அதற்கேற்றவாறு பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைப்பதில்லை. மாறாக லாபத்தினை மட்டும் அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொள்கின்றன. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலியப் பொருட்களின் இந்த விலை உயர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
இந்த விலை உயர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வங்கிக் கடன்பெற்று வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்கள் இதனால் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்களுடைய பொருளாதாரமும் பாதிக்கப்படும். அன்றாடப் பொருட்களின் விலை உயரும். குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் உற்பத்திச் செலவும் அதிகரிப்பதால், சந்தையிலும், ஏற்றுமதியிலும் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஏழை எளிய, நடுத்தர மக்கள் மற்றும் குறு சிறு தொழில் நிறுவனங்களைப் பாதிக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
