மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

அறந்தாங்கி, மார்ச் 2: மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்து அறந்தாங்கியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அறந்தாங்கி அருகே சிலட்டூர், கொல்லன்வயல், தாந்தாணி, அழியாநிலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணத்தொகை வழங்கவில்லை. இதனால் ஏன் நிவாரணத்தொகை வழங்கவில்லை, எவ்வளவு நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை கேட்டும், முறையிட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை.

இதனால் அறந்தாங்கி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் முன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த தகவல் கிடைத்ததும் காவல்துறை உதவி ஆய்வாளர் ரேஷ்மா மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: