புதுச்சேரி, மார்ச் 2: நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நீரிழிவு, இருதய பாதிப்பு உள்பட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி நேற்று காலை கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவேதா தடுப்பூசி செலுத்தினார். கேரளாவை சேர்ந்த செவிலியர் ரோசம்மா அவருக்கு உதவி செய்தார். பிரதமருக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு புதுச்சேரி செவிலியர் நிவேதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சுமார் மூன்று ஆண்டுகளாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறேன். இன்று (நேற்று) இங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள பிரதமர் வருகிறார் என காலையில் தான் செய்தி அறிந்தேன். தடுப்பூசி மையத்தில் எனக்கு பணி வழங்கப்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக நான் தான் பிரதமருக்கு தடுப்பூசி போட வேண்டும் என அழைக்கப்பட்டேன்.