மூணாறு அருகே விளைநிலத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை சாவு

மூணாறு, மே 7: அடிமாலி அருகே விளைநிலத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஒற்றை ஆண் காட்டு யானை உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே அடிமாலி ஊராட்சிக்கு உட்பட்ட வாளரா பகுதி நேரியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் யானை ஒன்று புகுந்து தொடர் சேதங்களை விளைவித்து வந்தது. இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில், தனிநபர் ஒருவரின் விவசாய நிலத்தில் அந்த யானை உயிரிழந்த நிலையில் கிடப்பதை மக்கள் கண்டனர். இது குறித்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், விளைநிலத்திற்குள் புகுந்த யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியிலோ அல்லது தாழ்வாகச் சென்ற மின் கம்பிகளிலோ உரசியதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: