திருச்சி, பிப்.26: காவேரி மருத்துவமனையின் முன்னோடியான பிளாஸ்டிக் மற்றும் நுண் அறுவை சிகிச்சை துறையில், அத்துறை தலைவர் டாஸ்டர் எஸ்.ஸ்கந்தா தலைமையில் 11 மாத குழந்தையின் துண்டான விரலை மீண்டும் பொருத்தி மருத்துவகுழு சாதனை புரிந்தது. உடல்மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக துண்டான உறுப்பையே மீண்டும் பொருத்தி இந்த மறு நடவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருச்சி காவேரி மருத்துவமனைக்கு 11 மாத குழந்தை, கனமான பொருளில் வலதுகை மோதிர விரல் மாட்டி விரல் துண்டான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அங்கு நுண் அறுவை சிகிச்சைதுறை தலைவர் டாக்டர் எஸ்.ஸ்கந்தா தலைமையிலான மருத்துவ குழுவினர் டாக்டர் ஆதில்அலி, டாக்டர் விஷால்கலசி மற்றும் மயக்கவியல்துறை தலைவர் டாக்டர் பி.சசிகுமார், டாக்டர் எஸ்.நிர்மல்குமார் ஆகியோர் இணைந்து சிகிச்சை அளித்தனர். 5 மணிநேர சிகிச்சைக்குப் பின் துண்டான விரலை வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்தனர். நுண்ணோக்கியின் வாயிலாக 25 மடங்கு ஆழமாக உள்ள அனைத்து ரத்த நாளங்கள், தசைநாண்கள் மற்றும் நரம்புகள் சீரமைக்கப்பட்டன. நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களை தைப்பதற்கு மனிதனது தலைமுடியைவிட 5 மடங்கு மெல்லிய மருத்துவ சூட்சுமங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.