நாகர்கோவில், பிப்.26: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை பணியாளருக்கு ₹10 லட்சம், உதவியாளருக்கு ₹5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இரவு பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவும் அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு படுத்து தூங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக நான்காவது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, பொருளாளர் சரோஜினி உட்பட நூற்றுக்கு மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கொளுத்தும் வெயிலில் தட்டு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.