விவசாயிகள் வலியுறுத்தல் அரசு ஊழியர்களாக அறிவிக்ககோரி 3வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்

திருச்சி, பிப்.25: அரசு ஊழியர்களாக அறிவிக்ககோரி அங்கன்வாடி ஊழியர்கள் திருச்சியில் நேற்று 3வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அங்கன்வாடி ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி பழைய கலெக்டர் அலுவலக சாலையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமையில் கடந்த 22ம்தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரவிலும் போராட்டம் நீடித்தது. இரவு உணவை அங்கேயே சாப்பிட்டு விடியவிடிய கொட்டும் பனியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று 3வது நாளாக அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சத்தியவாணி தலைமை வகித்தார். இதில் மாநில செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: