விசாகப்பட்டினத்தில் கூகுள் ஏஐ தரவு மையம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தார்லுவாடாவில் கூகுள் ஏஐ தரவு மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று கூகுள் தரவு மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: ஆந்திர மாநில வரலாற்றில் மறக்க முடியாத நாள் இன்று. கூகுளின் வருகை விசாகப்பட்டினத்திற்கு மட்டுமல்ல ஆந்திர மாநிலத்திற்கே ஒரு திருப்புமுனையாகும்.

கூகுள் ஏஐ தரவு மையம் ஆந்திர மாநில தொழில்நுட்பத்திற்கும் நாட்டிற்கும் ஒரு வளர்ச்சி இயந்திரமாக மாறும். ஆந்திர மாநிலம் எப்போதும் புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்கும். செயற்கை நுண்ணறிவுத் தரவு மையம் ஒரு ஜிகாவாட் திறனுடன் செயல்படும். ஆந்திர மாநிலம் இந்தியாவிற்கான ஒரு சர்வதேச தரவு நுழைவாயிலாகத் திகழும். கூகுள் இப்போது இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக மாறப்போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

* ஐதராபாத்துக்கு ஒரு புல்லட் ரயில்
விழாவில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘அமராவதி, ஐதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான இணைப்பு அதிகரிக்கப் போகிறது. புல்லட் ரயில்கள் தென்னிந்தியாவிற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். ரயில்வே, நெடுஞ்சாலைகள் மின்சாரம் மற்றும் துறைமுகங்கள் போன்ற அனைத்துத் துறைகளிலும் தென்னிந்தியாவிற்கு மிகப்பெரிய முதலீடுகள் வரவிருக்கின்றன. அமராவதியிலிருந்து ஐதராபாத்துக்கு ஒரு புல்லட் ரயில் வரப்போகிறது. நீங்கள் அமராவதியிலிருந்து ஐதராபாத்துக்கு வெறும் 70 நிமிடங்களில் செல்லலாம் என்று குறிப்பிட்டார்.

Related Stories: