திருச்சி, ஏப்.23: திருச்சி விமான நிலையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை விமான நிலையத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2020 பிப்ரவரி மாதம் சரக்கு லாரியில் கடத்த இருந்த 661.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதுரை துணை மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில், லாரியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும், முக்கிய புள்ளியாக ராமதாஸ் என்பவர் இதில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், ராமதாஸ் தலைமறைவாக இருந்து வந்தார். முக்கிய குற்றவாளியான ராமதாஸ் சிங்கப்பூரில் பதுங்கியிருந்தது போதைப் பொருள்கள் தடுப்புப்பிரிவினருக்கு தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 19ம்தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த ராமதாஸை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவு போலீசார் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
