சிவகாசி, பிப்.24: சிவகாசி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டும் செயல்படாமல் பூட்டியே கிடப்பதால் சிதிலமடைந்து வருகிறது. சிவகாசி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி அலுவலகத்திற்கு காமராஜர் சிலை அருகே ஏற்கனவே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 6 ஆயிரம் சதுர அடி பரப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் நகராட்சி கூட்ட மன்ற அரங்கம், ஆணையாளர் அலுவலகம், பொறியாளர் அலுவலகம், நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகாசி நகராட்சி கட்டிடம் நகரின் மைய பகுதியில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் இட நெருக்கடி ஏற்படுவதாக கூறி ரத்தினம் நகர் பூங்கா அருகில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.2 கோடியும், நகராட்சி இடை நிரப்புதல் மற்றும் இயக்குதல் திட்டத்தில் ரூ.3 கோடியும் செலவிடப்பட்டது.