பெரம்பலூர், பிப் 21: பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் திடீரென மழை பெய்ததால் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு அன்னமங்கலம் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கொண்டுவந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நெல் கொள்முதல் செய்து வரும் நிலையில் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடிக்க வைக்கப்பட்டு இருந்தது. மேலும் நெல் குவியலாக கொட்டப்பட்ட நிலையிலும் இருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திறந்தவெளியில் குவியலாக கொட்டி வைக்கப் பட்டிருந்த நெல் நனைந்தும் மற்றும் நெல் குவியலின் அடியில் மழைநீர் புகுந்து நெல் மிகவும் சேதம் அடைந்தது.