கோவை, ஏப்.12: கோவை மாவட்டத்தில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே படிவம் `12டி’ விண்ணப்பம் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதியில் 7583 மூத்த வாக்காளர்கள் (85 வயது கடந்தவர்கள்), 1692 மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. படிவத்தில் விண்ணப்பிக்காதவர்கள் தபால் வாக்களிக்க இயலாது.
பூர்த்தி செய்த வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்க வாக்கு பதிவு அலுவலர் தலைமையின் கீழ் நுண்பார்வையாளர் அடங்கிய 168 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் இன்று முதல் வரும் 14ம் வரை தபால் ஓட்டு வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டு சேகரிப்பார்கள். இந்த ஓட்டு சேகரிப்பு வீடியோ பதிவு செய்யப்படும். தபால் ஓட்டு சீட்டு ஓட்டு போட்ட பின்னர் கவரில் போட்டு தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். வெளிப்படையாக யாருக்கு ஓட்டு போட்டோம் என யாரும் காட்ட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
