கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மதுக்கரை ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் பிரசாரம்

பொள்ளாச்சி, ஏப்.8: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன், சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் பகுதிகளில், அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். நேற்று அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன், மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக, ஈச்சனாரி விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர், கிராமப் பகுதிகளுக்கு சென்று, பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து வேட்பாளர் செ.தாமோதரன் பேசுகையில், ‘‘தமிழக மக்களுக்கு, அதிமுக ஆட்சி காலத்தில் நல்ல திட்டங்கள் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டன. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச பிரிட்ஜ், மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி தரப்படும்.

குடும்ப நிதி உதவியாக ரூ.1000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். அம்மா அல்லம் திட்டத்தின்கீழ், சொந்த வீடு இல்லாத ஏழை எளியோருக்கு கிராமங்களில் தனி வீடுகளும், நகரங்களில் அடுக்குமாடி வீடுகளும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி முதல்வரானவுடன், அனைத்து தேர்தல் அறிக்கையும் நிறைவேற்றப்படும். எனவே, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என தெரிவித்தார்.

இந்த பிரசாரத்தின்போது, முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகம், மாவட்ட விவசாய அணி மகாலிங்கம், அமமுக அமைப்பு செயலாளர் மா.ப.ரோகினி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: