கொல்கத்தா: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐபிஎல் 19வது தொடரின் 15வது போட்டி, கொல்கத்தாவில் நேற்று நடந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்து வீசியது. கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் அஜிங்கிய ரஹானே, ஃபின் ஆலன் களமிறங்கினர். பிரின்ஸ் யாதவ் வீசிய 2வது ஓவரில் ஆலன் (9 ரன்) அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். பின் வந்த அங்கிரீஷ் ரகுவன்ஷி, ரஹானே உடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தார். இந்த இணை, 2வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில், ரஹானே (41 ரன்) அவுட்டானார். அவரைத் தொடர்ந்து, ரகுவன்ஷியும் (33 பந்து, 45 ரன்), விக்கெட்டை பறிகொடுத்தார். 14வது ஓவரில் ரிங்கு சிங் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன் பின், கேமரூன் கிரீன், ரோமேன் பாவல் இணை சேர்ந்தனர். 5வது விக்கெட்டுக்கு இவர்கள், 40 பந்துகளில் 70 ரன்கள் குவித்தனர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா, 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. கேமரூன் 24 பந்துகளில் 32 ரன், பாவல் 24 பந்துகளில் 39 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அதையடுத்து, 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்து போராடி வென்றது. 7வது விக்கெட்டுக்கு களமிறங்கி அதிரடியாக ஆடிய முகுல் சவுத்ரி 7 சிக்சர், 2 பவுண்டரியுடன் 27 பந்தில் 54 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடித்தந்தார். ஆயுஷ் பதோனி 34 பந்தில் 54 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
