கத்தி முனையில் தங்க நகை கொள்ளை வழக்கு புதுவை வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம், ஏப். 7: விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையை சேர்ந்த தங்கநகை வியாபாரி ராஜமாணிக்கம் என்பவர் கடந்த மார்ச் 3ம் தேதி ரூ.5 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்க நகைகளை சென்னைக்கு கொண்டு செல்வதற்காக சென்றார். அப்போது ஒரு கும்பல் வழிமறித்து கத்தி முனையில் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனர். இதனிடையே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட புதுச்சேரி மணவெளி சுரேந்தர் (22), முத்தியால்பேட்டை அரிகிருஷ்ணன் (28) ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. சாய்பிரனித் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Related Stories: