கரூர், பிப். 19: கரூர் மாவட்டம் மாயனூர் அருகே நெல்கொள்முதல் நிலையம் செயல்படாததை கண்டித்து ஆத்திரமடைந்த விவசாயிகள் பஸ்சை மறித்து மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், மாயனூர் அருகேகோவக்குளம் பகுதியில் ஆண்டு தோறும் நுகர்ப்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் அறுவடை செய்யப்பட்ட நெல் மூடைகள் பெறப்பட்டு வருகின்றன. இந்த பகுதியை சுற்றிலும் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். இந்தாண்டு ஜன.15ம்தேதி முதல் பிப்ரவரி வரை நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய அதிகாரிகள் வராத காரணத்தினால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மேலும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இதனால் தேக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.