பரமத்திவேலூர், ஏப்.5: பரமத்திவேலூரில் காவிரி ஆற்றிற்கு குளிக்க சென்ற பெண்ணை கிண்டல் செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். பரமத்திவேலூர் மீனவர் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கீர்த்தனா(21). இவர் கடந்த 3ம் தேதி, பரமத்திவேலூரில் உள்ள காவிரி ஆற்றிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சில பெண்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது, பரமத்திவேலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த மணி, வினோத், மதி மற்றும் பப்பு ஆகியோர் அவர்களை கேலி, கிண்டல் செய்துள்ளனர். மேலும் முன்விரோதம் காரணமாக மதி என்பவர், கீர்த்தனாவின் கையை கூரான பொருளால் கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் கீர்த்தனாவின் கையில் ரத்தம் வருவதை பார்த்து அவருடன் வந்தவர்கள் சத்தம் போடவே, 4 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இதில், காயமடைந்த கீர்த்தனா வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.
