கடலூர், பிப். 19: பண்ருட்டி அருகே வாலிபரை என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடலூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன் (30). இவரை கடலூர் சுப்பராயலு நகரில் 16ம் தேதி இரவில் நடந்த வீராங்கன் என்பவரின் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றவரை பண்ருட்டி அருகே 17ம் தேதி போலீசார் சுட்டுக்கொன்றனர். அவரது உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் அவரது தாயார் லட்சுமி (44), கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். மனுவில், தனது மகன் ஓவியராகவும், இசைக்குழுவில் டிரம்ப் வாசிப்பவராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், ரவுடி வீரா என்பவரின் கொலை வழக்குக்காக எனது மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர்.