இரணியல், திங்கள்நகரில் கோயில், வீடுகளில் திருடிய 2 பேர் கைது

திங்கள்சந்தை, ஏப்.3: இரணியல் அருகே பட்டன்விளையில் பத்திரகாளி அம்மன் கோயிலில் இருந்த பித்தளை விளக்குகள் மற்றும் பாத்திரங்கள் நேற்று முன்தினம் திருட்டு போனது. இதேபோல் கண்ணாட்டுவிளை சிவசக்தி கோயிலில் பூஜை பொருட்கள், பாத்திரங்கள் திருடப்பட்டிருந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திங்கள்நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தமிழ்செல்வி என்பவரது வீட்டில் சுமார் 3 பவுன் நகை திருட்டு போனது. இந்த சம்பவங்கள் குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அழகன்பாறை பகுதியை சேர்ந்த டேவிட்ராஜா (27) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து, விசாரித்த போது கொள்ளையடித்த நகையை ஆரோக்கியபுரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (48) என்பவரிடம் கொடுத்து தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து நகையையும், கோயிலில் கொள்ளை போன பொருட்களையும் மீட்டு, ஆனந்தகுமாரையும் கைது செய்தனர்.

Related Stories: