அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்புத்தூர், ஏப்.3: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலத்தில் ஸ்ரீ மதியாத கண்ட விநாயகர், ஸ்ரீ அழகு சௌந்தரி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு கடந்த 24ம் தேதி காப்பு கட்டப்பட்டு திருவிழா துவங்கியது.7ம் திருநாளன்று அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். 9ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.

பத்தாம் திருவிழாவான நேற்று காலை பட்டமங்கலம் பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் வயல் பகுதிகளில் பல்வேறு ஊர்களில் இருந்து துண்டு, மாலை, மணிகள் அணிவித்து அலங்கரித்து கொண்டுவரப்பட்ட 200க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் மாடுகளை பிடித்தனர். இதில் மாடு முட்டியதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக திருக்கோஷ்டியூர் காவல் நிலைய போலீசார் பட்டமங்கலத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Related Stories: