நாகர்கோவில், பிப்.18: ஈத்தாமொழி அருகே இறந்துபோன ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்களும், மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி அருகே உள்ள சுண்டபற்றிவிளை கோயில் தெருவில் வசித்து வந்தவர் கண்ணன் (43). தச்சு தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (37). இவர்களுக்கு, அனுஷ்கா (11) என்ற மகளும், விவாஸ் (4) என்ற மகனும் உண்டு. 2 வது மகன் விவாசுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. பல மருத்துவமனைகளில் காண்பித்தும் வலிப்பு நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த கண்ணன், சரஸ்வதி ஆகியோர், கடந்த 15ம் தேதி இரவு தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, தாங்களும் அடுத்தடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர்.