அரியலூர், பிப்.18: அரியலூர் ஒன்றியத்தில் 17,200 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் ஊராட்சி, பொய்யாதநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள கருத்துடையான் ஏரியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பலவகை மரக்கன்றுகளை கலெக்டர் ரத்னா நட்டு வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் பசுமையாக்கும் நோக்கில் வளர்ச்சித்துறையின் சார்பில் ஏரி, குளம், குட்டை மற்றும் நீர் வழித்தடங்களில் உதியம், பூவரசம், வாகை போன்ற மரங்கள் நடப்பட்டு வருகின்றன. அதன்படி, அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சிகளிலுள்ள பல்வேறு அரசுத்துறை மூலம் 17,200 மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளும் வகையில் அப்பகுதிகளிலுள்ள தன்னார்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர்.