திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மாநில பாஜ பொதுச்செயலாளர் சுரேஷ் கூறுகையில்,‘‘அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய ஆவணம் ஒன்றில் பாஜவின் முத்திரை கண்டெடுக்கப்பட்டதால் ஒரு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் ஒரு அரசு சாரா ஊழியர் சங்கத்துடன் தொடர்புடையவர். சமீபத்தில் தான் பணியில் சேர்ந்த அந்த அதிகாரிக்கு டிஒய்எப்ஐ மற்றும் எஸ்எப்ஐ போன்ற அமைப்புகளுடன் இருக்கும் தொடர்பு காரணமாகவே தேர்தல் ஆணையப் பணிக்கு நியமிக்கப்பட்டார்.
மாநிலத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை தடம் புரளச் செய்வதற்காக மாநில அரசும், சிபிஐ(எம்) இணைந்து தீட்டிய சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக தலைமை தேர்தல் அதிகாரி உட்பட தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாறிவிட்டதாக பாஜ கவலை கொள்கிறது. அது குறித்து சந்தேகமும் கொள்கிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி தரப்பில் இருந்தோ அல்லது சிபிஐ(எம்) கட்சியிடமிருந்தோ உடனடியாக எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.
