சிவகங்கை, பிப்.18: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் டவுன் பிளானிங் துறை சார்பில் உள்ளூர் திட்டக்குழும திட்டத்தின் கீழ் ட்ரோன் கேமரா மூலம் மாவட்டத்தின் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுத்து வரைபடம் தயாரிப்பதற்கான துவக்க விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி பணியை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘சிவகங்கை நகர்ப்பகுதியில் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பும் பணி துவக்கப்பட்டுள்ளது. தரைப்பகுதியிலிருந்து 120 மீ ஆகாயத்தில் பறந்து படம் எடுக்கும் பணியை விமானம் மேற்கொள்ளும். அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், நீர்நிலைப்பகுதிகள், பொதுமக்கள் குடியிருப்புப்பகுதிகள் மற்றும் குடியிருப்புக்களுக்கு ஏற்ற பகுதிகள் என துல்லியமாக கண்டறிந்து கணினி வாயிலாக வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெறும்.