கந்தர்வகோட்டை, மார்ச் 25: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோயிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை விழா நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி முருகனுக்கு வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு திரவியம், மஞ்சள், சந்தனம், குங்குமம், விபூதி, பால், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், நல்லெண்ணெய், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி முருகன் பக்தர்களுக்கு அருள் பாவித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து சென்றனர். பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை, சுண்டல், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
