மதுரை, பிப். 17: மதுரை சிம்மக்கல் ரவுண்டானா பகுதியில் இன்று முன்னாள் முதல்வர் கலைஞரின் வெண்கல சிலை திறக்கப்படவுள்ளது. இதுவும் சட்டப் போராட்டத்தால் தான் சாத்தியமானது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, தமிழ் மொழிக்காகவும், தமிழினத்துக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். 5 முறை சுமார் 6,863 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். அரசியல் மட்டுமின்றி, கலை, இலக்கியம் என பல துறைகளிலும் சிறந்து விளங்கினார். இவருக்கு மதுரையில் சிலை வைக்க முடிவு செய்த திமுகவினர் நகரின் பல இடங்களில் அனுமதி கேட்டு அதிகாரிகளிடம் முறையிட்டனர். வழக்கம்போல அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டனர். இதனால், தற்போதைய மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தளபதி, ஐகோர்ட் மதுரை கிளையின் கதவை தட்டினார். விளைவு சிலை வைக்க அனுமதிப்பது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் செவி சாய்க்காத தமிழக அரசு, நீதிமன்றத்தின் உத்தரவை கிடப்பில் போட்டது.