சென்னை: ரூபாய் 7,715 கோடி மதிப்பிலான தமிழக அரசின் பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்படவுள்ளதாக நிதித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு கூடுதல் நிதித்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.7715 கோடி மதிப்பில் 6.92 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2030 ரூ.1000 கோடி மறுவெளியீடு, தமிழ்நாடு அரசின் 7.31 சதவீத பிணையப் பத்திரங்கள் 2033 ரூ.1500 கோடி மறுவெளியீடு, தமிழ்நாடு அரசின் 7.18 சதவீத பிணையப் பத்திரங்கள் 2035 ரூ.2000 கோடி மறுவெளியீடு, தமிழ்நாடு அரசின் 7.58 சதவீத பிணைய பத்திரங்கள் 2037 ரூ.1500 கோடி மறுவெளியீடு மற்றும் தமிழ்நாடு அரசின் 7.52 சதவீத பிணையப் பத்திரங்கள் 2055 ரூ.1715 கோடி மறுவெளியீடு, ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 27ம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் 27ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
