திருவண்ணாமலை: கூலித் தொழிலாளியை அடித்து கொலை செய்த அதிமுக கவுன்சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூராட்சி 11வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜான் விக்டர் (42). இவரது புதிய வீடு கட்டுமான பணியின்போது, அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பால்ராஜ் வீட்டு வயரிங் வேலை செய்தார். ஆனால், அவருக்கான கூலியை வழங்காமல் ஜான் விக்டர் அலைகழித்ததாக கூறப்படுகிறது. பலமுறை கூலித் தொகையை கேட்டும், கொடுக்காமல், மிரட்டல் விடுத்துள்ளார்.
எனவே, எலக்ட்ரீசியன் பால்ராஜ் மற்றும் அவரது தம்பி மார்ட்டின் சார்லஸ் ஆகியோர் கடந்த 31.3.2013 அன்று ஜான் விக்டர் வீட்டுக்கு சென்று வயரிங் செய்த கூலித் தொகையை கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர் ஜான்விக்டர், எலக்ட்ரீசியன் பால்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். தடுத்த தம்பி மார்ட்டின் சார்லஸ் மீதும் சரமாரி தாக்குதல் நடந்துள்ளது. இதில் நிலை குலைந்து விழுந்தவர் மீது விறகு கட்டையால் தாக்கியுள்ளார். அதில், மார்ட்டின் சார்லஸ் உயிரிழந்தார்.
இது தொடர்பாக, வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிந்து ஜான் விக்டர் மற்றும் அவரது தாய் மேரி ஸ்டெல்லா, தங்கை விமலா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் விசாரித்து அதிமுக கவுன்சிலர் ஜான் விக்டருக்கு ஆயுள் தண்டனையும், தாய் மேரி ஸ்டெல்லாவுக்கு ரூ.500 மற்றும் விமலாவுக்கு ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தர்ப்பு அளித்தார். இதையடுத்து ஜான் விக்டரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
