நெல்லை: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான அல்வா உற்பத்தியை ஸ்வீட் ஸ்டால்கள் நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் போர் காரணமாக இந்தியா முழுவதும் சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. சமீபகாலமாக நிலவி வரும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் பல்வேறு இடங்களில் ஓட்டல்களும், சிறுகுறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு வருகின்றன. பல ஓட்டல்கள் விறகு அடுப்பை நம்பியே தொழில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சாந்தி அல்வா கடை, சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அக்கடையில் அல்வா உற்பத்தி நேற்று முதல் நிறுத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்தன. நெல்லை மாநகரில் உள்ள பல ஸ்வீட் ஸ்டால்களிலும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் தற்போது இனிப்பு வகைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாந்தி அல்வா கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், “வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எங்களையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. இருப்பில் உள்ள சிலிண்டர்களைக் கொண்டு தற்போது அல்வா தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இன்னும் ஒருநாள் மட்டுமே அல்வா தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். அதன் பின் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மாற்று எரிபொருளை பயன்படுத்தச் சொல்கின்றனர். ஆனால், சாந்தி அல்வாவின் அந்தப் பாரம்பரியமான சுவை மாறாமல் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பலமுறை சோதனை செய்து பார்த்த பிறகே மாற்றங்களைச் செய்ய முடியும். விறகு அடுப்புகளைப் பயன்படுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைப்பது மட்டுமே நிரந்தர தீர்வாகும்’’ என்றார்.
* இருட்டுக்கடை அல்வா விலை திடீர் உயர்வு
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நெல்லையில் பிரசித்தி பெற்ற இருட்டு கடை அல்வா விலையை உயர்த்தியுள்ளது. அங்கு ஏற்கனவே ஒரு கிலோ அல்வா ரூ.400க்கு விற்ற நிலையில், தற்போது கிலோ ரூ.440 என விற்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு தீர்ந்தபிறகு மீண்டும் அல்வா விலை குறைக்கப்படும் என கடை நிர்வாகம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
